CKD-யில் உணவு முறை (நாட்பட்ட சிறுநீரக நோய்)
நீரிழிவு நோய் (டயாபிடிஸ்) மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD)
சிறுநீரக நோயுடன் கூடிய
நோயாளிகளிடத்தில் மாறும் உணவுப்பழக்கங்கள்
உணவுப் பழக்கம் என்பது பாரம்பரியமாகவே எந்தவொரு நோயிலும்
முக்கிய பங்கு வகிக்கிறது. நோயாளிக்கு ஏற்படுகின்ற முதல் சந்தேகம் என்னவெனில்,
அவருக்கு மருத்துவ பிரச்சனை ஏற்படும் போது என்ன சாப்பிடுவது என்பதே. சிறுநீரக நோய்
கொண்ட நோயாளிகளுக்கான உணவு முறையை புரிந்துகொள்வதற்கு, சிறுநீரகத்தின்
செயல்பாடுகளைப் பற்றி நாம் சுருக்கமாக தெரிந்துகொள்ளவேண்டும்.
- அடிப்படையில், சிறுநீரகங்கள், வளர்சிதை மாற்றப் பொருட்களை (மெடபாலிக்
ப்ராடக்ட்) வெளியேற்றுகிறது. நாம் சாப்பிடுகின்ற உணவானது மிகச்சிறிய பகுதிகளாக
உடைக்கப்பட்டு, அது உட்கிரகிகப்பட்ட பிறகு, உடலில் ஆற்றல் உருவாக்கப்படுகிறது.
உணவின் மிகமுக்கிய பாகமான புரதமானது (புரோட்டீன்) அமினோ அமிலங்களாக
உடைக்கப்படுகிறது, அது பிறகு இறுதி வடிவமாக அம்மோனியாவை வெளியிடுகிறது.
அம்மோனியா, கல்லீரலில் யூரியாவாக மாற்றப்படுகிறது. யூரியா, சிறுநீரகங்களால்
அகற்றப்படுகிறது. அதே போல, புரதங்கள், குறிப்பாக மாமிசப் புரதமானது,
சிறுநீரகங்களால் வெளியேற்றப்படுகின்ற அமிலங்களை உற்பத்தி செய்கிறது. எனவே,
சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் போது, இரத்த யூரியா அளவுகள் அதிகமாவதுடன், உடலில்
அமிலம் கூடுகிறது.
- இரத்தத்தை சுத்தம் செய்வதன் மூலம் உடலின் அகச்சூழலை பராமரிப்பதும், நீரையும்
மின்பகு பொருட்களையும் பரமாரிப்பதுமே சிறுநீரகத்தின் முக்கியமான செயல். அத்துடன்,
நாம் நீரகற்றப்பட்டவர்களாகவோ வீங்கியவர்களாகவோ ஆகாத வகையில் இவற்றின் அளவை சரியாக
அகற்றுவதும் சிறுநீரகங்களின் பொறுப்பு. அதேபோல, உணவின் சுவையை மேம்படுத்துவதற்காக
நமது உணவில் நாம் ஏராளமான உப்பை (சோடியம் குளோரைடு) சேர்த்துக்கொள்கிறோம், இந்த
கூடுதல் உப்பை அகற்றுவது சிறுநீரகங்களின் பணியாகிறது, இச்செயலால் நமக்கு உயர்
இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை. இயற்கை உணவில் பொட்டாசியம் உட்பட பல்வேறு கனிமங்கள்
காணப்படுகின்றன, அவையும் சிறுநீரகங்களால் வெளியேற்றப்படுகின்றன.
புரத உட்கொள்ளல்
வரலாற்று அடிப்படையில், அரிசி உருளைக்கிழங்கு உணவே, சிறுநீரக
செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் ஊட்ட உணவு,
கூடுமான வரை புரதங்கள் தவிர்க்கப்படவேண்டும் என்கின்ற மற்றும் கார்போஹைட்ரேட்களின்
ஆற்றலை நோயாளிகள் பெறவேண்டும் என்கின்ற கருத்தின் அடிப்படையில் அமைந்தது. இது பிறகு
யூரியா உற்பத்திக் குறைவை விளைவிக்கிறது.
அதேபோல, பார்லி சுத்தமான கார்போஹைட்ரேட் என்பதால் ஓர் முக்கிய
உணவாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர், காய்கறிகளும் மாமிசப்
புரதங்களும் உட்பட 20 கிராம் புரதம் உள்ள உணவு பரிந்துரைக்கப்பட்டது. இதனால்
யூரியா அளவுகள் கீழிறங்கின, ஆனால் நோயாளி ஊட்டச்சத்து குறைபாடு மிக்கவராக
மாறியதுடன் வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்பட்டது, இதுவே மேற்கூறிய உணவு வகைகளின்
மிகப்பெரிய குறைபாடாக இருந்தது. எனவே, புரதக் கட்டுப்பாடு குறிப்பாய் மேலை நாட்டு
உணவு முறை க்குதான் தேவை. சைவ உணவு வகை, கட்டுப்படுத்தப்பட வேண்டிய அளவிற்கு அதிக
புரதங்களை கொண்டிருப்பதில்லை. எனவே, சராசரி இந்திய சைவ உணவு முறையானது, சிறுநீரக
கோளாறு உள்ள நோயாளிகளின் புரத உட்கொள்ளல் தொடர்பாக ஏறத்தாழ நிர்ணயிக்கப்பட்ட
ஒன்றாக இருக்கிறது. நோயாளிகளின் சிறுநீரக செயலிழப்பின் நிலை திடீர் அல்லது
நாட்பட்டதா என வேறுபடுத்திப் பார்ப்பதும் முக்கியமானது. சிறுநீரகத்தின் திடீர்
செயலிழப்பு எனும் விஷயத்தில், நோயாளி குணமடைவதற்கு ஊட்டச்சத்து மிகவும்
முக்கியமானது. எனவே, புரதக் கட்டுப்பாடு பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆனால்,
சிறுநீரகங்கள் மீள முடியாத அளவிற்கு சேதமாகியுள்ளதான நாட்பட்ட சிறுநீரக
செயலிழப்பு விஷயத்தில், வளர்ச்சியை தடுப்பதற்காக நோயின் ஆரம்ப நிலையில்
நாளொன்றுக்கு 40 கிராம் என புரதத்தை, குறிப்பாக மாமிசப் புரதத்தை குறைப்பது
பரிந்துரைக்கப்படுகிறது. நோய் முற்றிய நிலையில், நோயாளிகள் ஊட்டச்சத்து குறைபாடு
மிக்கவர்களாக மாறிவிடுவர் என்கின்ற காரணத்தால் புரதக் கட்டுப்பாடு
பரிந்துரைக்கப்படுவதில்லை.
உப்பு உட்கொள்ளல்
உப்பு உட்கொள்ளும் விஷயத்தைப் பொருத்தவரை, சாதாரண
மனிதர்களால் தவறாய் கருதப்படுகின்ற படி உப்பு என்பது யூரியா அல்ல, அது சோடியம்
குளோரைடு. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளுக்குமே உப்புக்
கட்டுப்பாடு தேவையில்லை. வீங்கிய கால்களையுடைய நோயாளிகளுக்கு மட்டுமே உப்புக்
கட்டுப்பாடு தேவை. உப்புக்கான மாற்றுப்பொருட்கள் மிகவும் ஆபத்தானவை, ஏனெனில் அவை
பொட்டாசியத்தை கொண்டுள்ளன.
நீர் உட்கொள்ளல்
அதிகளவு நீர் எடுத்துக்கொள்வதானது சிறுநீரக செயல்பாட்டை
மேம்படுத்தும் என்கின்ற தவறான கருத்து உள்ளது. அதற்கு மாறாக, சிறுநீரக
செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடத்தில், நீரானது உடலில் ஒன்று திரண்டு
இரத்த சோடிய உப்புக்குறையை விளைவிக்கிறது. எனவே, நீர் அல்லது திரவ கட்டுப்பாடு
முக்கியமானது, அது நோயாளிக்கு நோயாளி மாறுபடும்.
பொட்டாசியம் உட்கொள்ளல்
ஏறத்தாழ சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து
நோயாளிகளுக்குமே, உணவில் பொட்டாசிய கட்டுப்பாடு தேவைப்படுகிறது. பழச் சாறுகள்,
இளநீர், உலர் பழங்கள், பச்சை இறைச்சி போன்றவற்றில் அதிக பொட்டாசியம்
காணப்படுகிறது.
சிறுநீரகக் கல் பிரச்சனை
சிறுநீரகக் கல் பிரச்சனை கொண்ட நோயாளிகளின் விஷயத்தில்,
மீண்டும் உணவு முறை தொடர்பான கருத்தில் மாற்றம் உள்ளது. உண்மையில் பெரும்பாலான
கற்கள், கால்சியம் ஆக்ஸலேட் கற்களாக இருப்பதால், குறைவான கால்சியம் மற்றும்
ஆக்ஸலேட் உணவுமுறை பரிந்துரைக்கப்பட்டன. ஆனாலும், இதற்கு முற்றிலும் மாறாக,
கால்சிய கட்டுப்பாடானது, எலும்புகளில் கால்சிய இழப்பையும் கல் உருவாவதின்
தொடர்ச்சியையும் விளைவிக்கிறது, எனவே குறைவான கால்சிய உணவு முறை
பரிந்துரைக்கப்படுவதில்லை. அதேபோல, கல் உருவாவதற்கு முக்கியமாக தக்காளிப்
பழங்களே பொறுப்பு என்பது சரியல்ல. உணவிலுள்ள அதிக புரதமானது, யூரிக் அமிலம்
உருவாவதற்கும் அதிக அமிலத்தன்மை வாய்ந்த சிறுநீரையும் விளைவிப்பதாக
கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக கல் உருவாவதை விரைவுபடுத்துகிறது.
அதுமட்டுமல்லாது, உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொள்வதானது, சிறுநீரில்
சோடியத்துடன் சேர்த்து கால்சியத்தையும் இழுத்துச்சென்று, கல் உருவாவதை
விளைவிக்கிறது. எனவே, சிறுநீரக கல் பிரச்சனை கொண்ட நோயாளிகளுக்கு, குறைந்த புரத
மற்றும் குறைந்த உப்பு கொண்ட உணவே தற்போது பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல,
அமிலத்தன்மை வாய்ந்த சிறுநீரானது எரிச்சலை உண்டுபண்ணுகிறது, குறிப்பாக சிறுநீர்ப்
பாதைத் தொற்று இருக்கும் பட்சத்தில். மிகுதியான காய்கறிகள் கொண்ட உணவு முறையானது,
சிறுநீரை காரத்தன்மை வாய்ந்ததாக ஆக்குவதுடன், நோய்க்குறிகளை குணமாக்குகிறது.
கூடுதல் தகவல்கள்
|